லஞ்ச ஒழிப்பு துறையில் பணியாற்றி வந்த ஆய்வாளர் விமலா, ஒரு அரசு அதிகாரி மீதான ஆரம்பகட்ட கண்காணிப்பு விசாரணையை மேற்கொண்டபோது, அவரிடம் லஞ்சம் கேட்டதாக உள்துறை கண்காணிப்பில் தெரியவந்ததாக கூறப்படுகிறது.
இந்த விவகாரம் குறித்து டிஐஜி என். தேவராணி, லஞ்ச ஒழிப்பு துறை இயக்குநர் அருண் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றதைத் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டது.
விசாரணை அறிக்கையின் அடிப்படையில் ஆய்வாளர் விமலா இடைநீக்கம் செய்யப்பட்டார். மேலும், இந்த விவகாரத்தில் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்பட்ட டிஎஸ்பி ஜாய் நீலகிரி மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு
இதற்கிடையில், இன்ஸ்பெக்டர் ராஜலட்சுமி மீது வழக்குப் பதிவு செய்தது தொடர்பாகவும், தன்னை இடைநீக்கம் செய்தது குறித்தும் விமலா தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் சம்பந்தப்பட்ட ஆவணங்களை பரிசீலித்தது.
நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களின்படி, ராஜலட்சுமி மீது முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யுமாறு கண்காணிப்புத் துறை அதிகாரிகளே விமலாவுக்கு உத்தரவிட்டதுடன், எஃப்.ஐ.ஆர். வரைவை தயாரிக்கவும் அறிவுறுத்தியிருந்தனர்.
அந்த வரைவு பின்னர் லஞ்ச ஒழிப்பு துறை இயக்குநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டதுடன், 12.02.2026 அன்று காவல் கண்காணிப்பாளர் ஆய்வு செய்து சில திருத்தங்களை மேற்கொண்ட பிறகே முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
உயர்நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவு
ஆவணங்களை பரிசீலித்த நீதிமன்றம், ஜூன் 17 அன்று பிறப்பிக்கப்பட்ட இடைநீக்க உத்தரவுக்கு ஜூலை 9 வரை இடைக்காலத் தடை விதித்தது.
மேலும், எதிர்மனுதாரர்கள் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கின் அடுத்த விசாரணையை ஜூலை 9 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.



